மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்பவர்கள் தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான முயற்சியின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் பிரதீப் சபுதந்திரிக்கு அவசர கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழ்பவர்கள் தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும்போது தோட்ட முகாமைத்துவத்தின் கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.
இதனையடுத்து ஏனைய சமூகங்களுக்குபோல், வதிவிடத்தை உறுதிசெய்யும் நடவடிக்கையும் கிராம சேவகர்கள் ஊடாக முன்னெடுக்குமாறு கோரி, இது விடயத்தில் தோட்ட நிர்வாக தரப்பிடம் இருந்து ஆவணங்கள் எதுவும் பெறப்படாத வகையில் பொறிமுறையை உருவாக்குமாறு கோரி ஆட்பதிவு திணைக்கள ஆணையாளருக்கு அமைச்சரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.