தற்போதைய அரசாங்கம் நாட்டை வங்குரோத்தாக்கி, நாட்டை அழித்து, பெரும் செல்வந்தர்களுக்கு கோடிக்கணக்கான தொகை வரிச்சலுகைகளை வழங்கி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12% சதவீதமாக இருந்த அரச வருமானத்தை 8% ஆக குறைத்து, நாட்டையே சவக்கிடங்காக மாற்றியுள்ளனர். இந்த சவக்கிடங்கு உருவாக இந்த அரசாங்கமே காரணம். தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 113 உறுப்பினர்களும் ஊழல் மோசடியான மருந்துப் பொருள் வர்த்தகத்தை மேற்கொண்ட அமைச்சருக்கு ஆதரவாக முன் நின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தில் நாட்டுக்கு வழங்கப்படும் தீர்வுகள் மற்றும் பதில்கள் குறித்து நாட்டுக்கும் மக்களுக்கும் சபைக்கும் தெரிவிக்கப்படும். இந்த வழிமுறைகள் மூலம் நாட்டை வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து மீட்டெடுக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நாட்டில் வறியோர் சமூகம் 30 இலட்சத்தில் இருந்து 70 இலட்சமாக அதிகரித்துள்ள இவ்வேளையில், நாட்டின் ஏறக்குறைய பாதியளவு மக்கள் வறுமையினாலும் அடக்குமுறையினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டை ஆளும் தலைவர்களின் நெஞ்சில் சற்றேனும் மக்கள் குறித்த கருணை ஏற்பட்டு, எளிய மக்களின் துயரங்களுக்கும் கண்ணீருக்கும் தெளிவான தீர்வை வழங்க புதிய வறுமை ஒழிப்புத் திட்டமொன்றின் தேவை தற்போது எழுந்துள்ளது.
இது வெறும் பண நன்கொடையுடன் மட்டும் நின்றுவிடாமல், வறிய சமூகத்தின் நுகர்வு, முதலீடு, சேமிப்பு, உற்பத்தி போன்றவற்றில் கவனம் செலுத்தி வறுமையை ஒழிப்பதற்கான புதிய தேசிய திட்டத்தை நாம் ஆரம்பிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வறுமைக் கோடு அடையாளம் காணப்படுவதற்கு முன்பே அஸ்வெசும திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது ஒரு விஞ்ஞானப்பூர்வமற்ற தோல்வியடைந்த திட்டமாகும். இது பணத்தை பகிர்ந்தளிப்பதற்கு அப்பால் ஒரு வாழ்வாதார வருமான திட்டத்திற்கு சென்று, பயனாளிக்கு பக்க பலத்தை வழங்கும் திட்டமாக ஆரம்பிப்போம். இது தேசிய வேலைத்திட்டமாக மாற்றப்படும். தகவல் மற்றும் தரவுகளின் அடிப்படையில், ஜன சவிய திட்டத்தில் இருந்து பாடங்களைக் கற்று, ஜன சவிய திட்டத்தையும் தாண்டிய காலத்திற்கேற்ற புதிய திட்டமாக இதை நாம் முன்னெடுப்போம். இது தேர்தல் வாக்குறுதியல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.