“ஒரு நாடு, ஒரே சட்டம்” என்ற தலைப்பில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை அறிக்கையூடாக கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டரீதியாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்படாமல் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியினால், “ஒரு நாடு ஒரு சட்டம்” என்ற நோக்கத்தை ஆராய்ந்து நடைமுறைப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் அற்றுப் போயுள்ளதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டவரின் கடந்த காலங்களை கருத்திற்கொள்ளாமல், தமிழ், இந்து, கத்தோலிக்க, கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் வழங்காது, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதால் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளதாகவும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை குறிப்பிட்டுள்ளது.
செயலணியின் தலைவர் நியமனம், தலைவராக நியமிக்கப்பட்ட நபரின் கடந்த கால பதிவுகளை கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்டமை குறித்தும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை கவலை கொள்வதாக தெரிவித்துள்ளது.
சட்டத்தின் முன்பாக, சகல பிரஜைகளும் சமமாக நடத்தப்படும் அரசியலமைப்பு உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அறிக்கையூடாக கோரிக்கை விடுத்துள்ளது.