மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கும் போது கொவிட் தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டதற்கான தடுப்பூசி அட்டையை வைத்துக்கொள்வதை கட்டாயப்படுத்த வேண்டும் என ராகம வைத்திய பீட சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுனத சில்வா தெரிவித்தார்.
ஹோட்டல்கள் மற்றும் மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களுக்கு செல்பவர்களின் கொவிட் தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் பெற்றுகொண்டதற்கான கொவிட் தடுப்பூசி அட்டையை பரிசோதனை செய்வதை கட்டாயமாக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
உலகில் பல நாடுகள் இந்த திட்டத்தை செயற்படுத்தி, அதன் மூலம் சிறந்த பெபேறுகளை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
அத்துடன் இவ்வாறான வேலைத்திட்டத்தை பின்பற்றி வருவதன் மூலம் கொவிட் தொற்று ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணத்துக்கு பரவுவதை முடிந்தளவு கட்டுப்படுத்திக்கொள்ள முடியுமாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.
இதேவேளை, கொவிட் வைரஸ் புதிய திரிபு எதிர்வரும் காலங்களிலும் பரவலடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்நிலையில், தடுப்பூசி செலுத்தல் மற்றும் அடிப்படை சுகாதார வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி செல்வதன் மூலம் புதிய வைரஸ்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தும் சட்டத்தை கடுமையாக செயற்படுத்தவேண்டும்.
மேலும் வைத்திய நிபுணர்களின் ஆலோசனைக்கமைய புதிய சுகாதார வழிகாட்டல்களை அடிக்கடி அறிமுகப்படுத்துவது முக்கியமாகும் என்பதுடன் குறித்த சுகாதார வழிகாட்டல்கள் முறையாக நடைமுறைப்படுத்த வேணடுமெனின் தொடர்ச்சியான பின் அறிக்கையிடல் வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளாா்.