ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமெரிக்க விஜயம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகிற போதும் , இந்த விஜயத்தினால் நாட்டுக்கு பல நன்மை ஏற்படும் என காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஏனைய உலக வல்லரசுகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுவடைந்துள்ளதாகவும் ருவன் விஜயவர்தன சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ருவன் விஜயவர்தன இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன,
2030 ஆம் ஆண்டுக்குள் மின்சார உற்பத்தியில் 70% புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் ஊடாகப் பெறுவதற்கும் , வனப் பரப்பை 32% ஆக அதிகரிக்கவும், பசுமை வாயு வெளியேற்றத்தை 14.5% குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 2040 இல் நிலக்கரிப் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்து, 2050 இல் காபன் நிகர பூஜ்ஜியத்தை அடைய எதிர்பார்த்துள்ளதாகவும், நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நியூயோர்க் மெட்டா (Meta) நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் சேர். நிக் கிளெக் Sir (Nick Clegg) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்றும் நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவிற்கும் (Kristalina Georgieva) இடையிலான சந்திப்பு நியூயோர்க்கில் உள்ள ஐ. நா சபையின் தலைமையகத்தில் இடம்பெற்றதுடன், இலங்கையின் நிதித்துறை சீ்ர்த்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.
இதன்போது, இலங்கையில் பணவீக்கத்தைக் குறைத்ததுடன், நாட்டில் வர்த்தகத்திற்கு பொருத்தமான சூழலை உருவாக்கியமை மற்றும் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும், இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தையும் அவர் பாராட்டினார் ” என்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.