கொழும்பில் இன்று (31) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும், பேலியகொட வித்யாலங்கார விஹாரையின் மாநாயக்க தேரருமான வெலமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகளை முன்னிட்டே, இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
அன்னாரது இறுதிக் கிரியைகள், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று பூரண அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ள நிலையில், சுதந்திர சதுக்கத்தை நோக்கி பூதவுடல் கொண்டு வரப்படும் வீதிகளிலேயே, இந்த திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு வித்யாலங்கார பிரிவேனாவில் இருந்து புறப்பட்டு கண்டி வீதி, களனி பாலம், பேஸ்லைன் வீதி, பண்டாரநாயக்க சந்தி, ஒருகொடவத்தை சந்தி, தெமட்டகொடை சந்தி, சிறைச்சாலை சந்தி, பொரளை சந்தி, டி.எஸ்.சேனநாயக்க சந்தி வழியாக பயணிக்கவுள்ளது.
விஜேராம சந்தி, ஹோர்டன் பிளேஸ் சுற்றுவட்டம், நந்தா மோட்டார்ஸ் வீதி வழியாக சுதந்திர சதுக்கத்தை சென்றடையவுள்ளது.
இதனை முன்னிட்டு குறித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக இந்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.