ஞானசாரதேரரின் தலைமையில் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கை தொடர்பான செயலணி உருவாக்கப்பட்டுள்ளமை குறித்து தமது கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள், இப்புதிய செயலணியின் செயற்பாடுகள் இறுதியில் இலங்கையின் சிறுபான்மையின சமூகத்தை இலக்குவைப்பவையாக மாறக்கூடும் என்றும் எச்சரித்திருக்கின்றன.
அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இலங்கைக்குள் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற கொள்கையை செயற்படுத்தும் வரைபைத் தயாரிப்பதற்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் அடங்கிய விசேட ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுவந்தவரும் அதன் காரணமாகப் பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தவருமான ஞானசார தேரரின் தலைமையில் மேற்படி புதிய செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறித்தும் 13 உறுப்பினர்களில் 4 முஸ்லிம்கள் உள்ளடங்குகின்ற போதிலும் தமிழர்கள் எவரும் உள்வாங்கப்படாமை குறித்தும் உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதேவேளை இவ்விடயம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் சிரேஷ்ட ஆலோசகர் அலன் கீனென், ‘தேரரின் தலைமையில் மிகவும் பக்கச்சார்பான முறையில் ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டிருக்கும் செயலணியானது, பொறுப்புக்கூறல் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் சர்வதேசத்திற்கு வழங்கப்பட்ட அண்மைய வாக்குறுதிகளை நம்புபவர்களுக்கு யதார்த்தம் என்னவென்பதைக் காண்பித்திருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி மக்கள் மத்தியில் அச்சத்தை விதைப்பதன் ஊடாகவும் சிறுபான்மையின சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் இலங்கை அரசாங்கம் அதன் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு முயற்சிப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் பிரபல அரசியல் ஆய்வாளர்கள் சிலர் எச்சரித்திருந்ததாக சுட்டிக்காட்டியுள்ள அலன் கீனென், அத்தகைய மிகமோசமான உத்தி தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றமை ஞானசாரதேரரின் நியமனத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைமுறையிலுள்ள தேசவழமைச்சட்டம் மற்றும் முஸ்லிம் சட்டம் ஆகியவற்றை நீக்கி, தனிச்சிங்களச் சட்டமொன்றைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தரணியான தமிழ் அனந்தவிநாயகன், ஞானசாரதேரர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள செயலணியில் தமிழ்ப்பிரதிநிதிகள் உள்வாங்கப்படாமை தொடர்பிலும் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.