எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் மேலும் 5 புதிய விமான சேவை நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.
சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் பலனாகவே இவ்வாறு 5 நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதன்படி, நவம்பர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் சுவிட்சர்லாந்தின் எடில்வயிஸ் (Edelweiss) விமான சேவை நிறுவனம், டிசம்பர் மாதத்திற்குள் ரஷ்யாவின் எயாரோ ப்லோட் விமான சேவை நிறுவனம், பிரான்சின் எயார் பிரான்ஸ் விமான சேவை நிறுவனமும், ரஷ்யாவின் எயார் அசுர் நிறுவனமும் இவ்வாறு விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடுமையான சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக இவ்வாறான விமான சேவைகளை முன்னெடுப்பதன் ஊடாக தேசிய பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்க முடியுமெனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.