அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நாட்டுக்கு தேவையான முட்டை தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தொழிற்சங்க பிரதிநிதிகள் இதனை தெரிவித்ததாக டெய்லி சிலோனுக்கு தெரிவிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் விவசாய அமைச்சு, சுகாதார அமைச்சு, நுகர்வோர் அதிகார சபை, இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் மற்றும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
நாளொன்றுக்கு ஒரு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு கடந்த மே மாதம் அனுமதி வழங்கப்பட்ட போதிலும், தேவைக்கு ஏற்றவாறு முட்டைகளை இறக்குமதி செய்யாமை தொடர்பில் உரிய அதிகாரிகள் அரச வர்த்தக சட்ட கூட்டுத்தாபனத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அனுமதி வழங்கப்பட்ட காலப்பகுதியில் இருந்து நாளாந்தம் 10 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், இந்த நாட்டில் முட்டையின் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருக்கும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் வரை தினமும் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வரும் பண்டிகைக் காலத்தில் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு வெளியிடலாம் என்றும் இது தொடர்பான விவாதத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு முட்டைகளை வெளியிட முடியுமாயின், முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் சந்தையில் முட்டைக்கான தேவையை மீளவும் உரிய தரப்பினரை அழைத்து மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க, முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டார்.