இரத்தினபுரி கிரியெல்ல வீதியில் பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கும் பொதுமகன் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
காரை ஓட்டிச் சென்ற ஒருவரை கைது செய்ய முயற்சித்த போது குறித்த நபர் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். பொலிஸ் உயர் அதிகாரியின் ஜீப் வண்டியில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு ஏற்றிச் செல்வதற்கு பொலிசார் முயற்சித்துள்ளனர்.
சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு குறித்த நபரைக் கைதுசெய்து ஜீப் வண்டியில் ஏற்ற முயற்சித்துள்ளார்.
ஒழுங்கற்ற விதத்தில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபரை ஜீப்பில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் கைது செய்ய முயற்சித்துள்ளனர்.
சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வாகனத்திற்கு இடையூறு செய்ததாகவும், போக்குவரத்து விதிகளை மீறி அந்த நபர் வாகனத்தை ஓட்டிச் சென்றதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பொலிஸாருடன் மோதலுக்கு முயற்சித்த நபர் பொலிஸ் அதிகாரிகளை தரக்குறைவாக திட்டியதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபரைக் கைதுசெய்ய முயற்சித்த போது உயர் பொலிஸ் அதிகாரியொருவர் அந்த நபரைத் தாக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.
சந்தேக நபரை பிடித்து சோதனையிட்ட போது அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், குறித்த நபர் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வாகனத்திற்கு இடையூறு செய்தமையினால் ஆத்திரமடைந்து பொலிசார் அவரைக் கைதுசெய்ததாக சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் பணிப்புரையின் பேரில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.