நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரச அதிகாரிகள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் கொண்ட சாதாரண பொதுமக்களுக்குச் சேவையாற்றும் நிறுவனமே வீடமைப்பு அதிகார சபையாகும்.
அதில் மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை உள்ளது.
குறிப்பாகக் கொழும்பு மாவட்ட மக்களுக்காகப் பணியாற்றும்போது மக்களின் துயரம் எத்தகையது என்பதனை நான் அறிந்திருக்கிறேன்.
இதன் காரணமாகவே எனக்கு வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் பதவியைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கினார்.
இதன் மூலம் எதிர்காலத்தில் 70,000 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நான் அரசியலுக்குள் மீண்டும் பிரவேசிப்பேனா இல்லையா என்பது தெரியாது.
எனினும் சிறந்த சேவைகளை வழங்கியதன் காரணமாகவே எனக்கு இவ்வாறான பொறுப்புகள் வழங்கப்படுகின்றன.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அதிகாரிகள் அனைவரும் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்.
அத்துடன், சேதன பசளையினூடாக விவசாயத்துறையினை கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் இலக்காகும்.
அதனைத் திசைத்திருப்புவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர்.
ஜே.வி.பி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆகியோர் இணைந்தே அதனை முன்னெடுத்து வருகின்றனர்.
சிறியளவிலான எண்ணிக்கையிலானோரே இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.