மத்திய வங்கி பிணை மோசடி நடவடிக்கை விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றின் சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் தீர்மானித்தது.
மத்திய வங்கியில் 2016 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி நடாத்தப்பட்ட மூன்றாவது பிணை முறிகள் ஏலத்தின் போது இடம்பெற்ற மோசடி ஊடாக 15 பில்லியன் ரூபா அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பான வழக்கே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந் நிலையில் வழக்கின் சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டுள்ள, மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் இந்ரஜித் குமாரசுவாமி, நிதி அமைச்சின் செயலர் எச்.ஆர். ஆட்டிகல உள்ளிட்ட ஐவரை அன்றைய தினம் சாட்சியம் வழங்க மன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றின் சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்தது.
மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தலைமையில் நாமல் பண்டார பலல்லே மற்றும் ஆதித்ய பட்டபெத்தி ஆகிய நீதிபதிகளை உள்ளடக்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றமே மேற்படி தீர்மானத்தை எடுத்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த விவகர வழக்கின் பரிசீலனைகள் இடம்பெற்ற போது, வழக்கின் 10 ஆவது பிரதிவாதியான ஊழியர் சேம இலாப நிதியத்தின் அப்போதைய பிரதானி பதுகொட ஹேவா இந்திக சமன் குமார சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமர்டஹ்ன, தனது சேவைப் பெறுநரின் பிரதிவாதித் தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்காக இலங்கை மத்திய வங்கியின் பொறுப்பில் உள்ள 25 ஆவணங்களை தமக்கு வழங்க மத்திய வங்கியின் சட்டப் பிரிவு பணிப்பாளருக்கு உத்தரவிடுமாறு கோரினார்.
எனினும் இதன்போது வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி ஹிரியாகம அக்கோரிக்கையை கடுமையாக எதிர்த்தார்.
பிரதிவாதி கோரும் அந்த ஆவணங்கள், வழக்குடன் தொடர்பு பட்டவை அல்ல எனவும், அவற்றை வழங்க முடியாது எனவும் அவர் வாதிட்டார்.
இந் நிலையில் 10 ஆவது பிரதிவாதியின் அந்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றின் சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் பெரும்பன்மை நீதிபதிகளின் தீர்மானத்துக்கு அமைய நிராகரித்தது.
தலைமை நீதிபதி அமல் ரணராஜா, நீதிபதி நாமல் பலல்லே ஆகியோர் அந்த ஆவணங்களை வழங்கத் தேவையில்லை என தீர்மானித்ததுடன் நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி, குறித்த ஆவணங்களை வழங்க வேண்டும் என அறிவித்தார்.
இதனையடுத்து வழக்கானது சாட்சி விசாரணைக்காக எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.