இந்தியாவில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல இஸ்லாமிய அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் செய்யப்பட்ட வக்ஃப் சட்ட திருத்தத்திற்கு எதிராக பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளிலும் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி, வங்கதேச இஸ்லாமி சத்ரா ஷிபிர் ஆகிய அமைப்புகள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் ஊடகங்கள் இது இஸ்லாமிய சமூகத்திற்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளன.
வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மியா கோலம் போர்வார் ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இது மோதி அரசாங்கத்தின் “சர்ச்சைக்குரிய” நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.
“இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள வக்ஃப் சட்டத் திருத்தத்தை எதிர்க்கிறோம். இது குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். இதனை கண்டிக்கிறோம். இந்தியாவில் பாஜக அரசு தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான முடிவுகளை எடுத்து வருகிறது”, என்று மியா கோலம் போர்வார் கூறியுள்ளார்.
“இந்த வக்ஃப் சட்டத் திருத்த மசோதா கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இஸ்லாமிய சமூகத்தின் உரிமைகள், அவர்களின் மத சுதந்திரம் மற்றும் உரிமையை பாஜக அரசு எவ்வாறு குறைந்து மதிப்பிட முயற்சிக்கிறது என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. இந்த சட்டத்தின் மூலம், மசூதிகள், மதரஸாக்கள், கல்லறைகள், தங்குமிடம் போன்ற இஸ்லாமிய சொத்துகளில் அரசாங்கம் தலையிட கதவுகள் திறக்கப்பட்டுள்ளன”, என்றும் அவர் கூறினார்.
