ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு ஒத்திவைப்பு தொடர்பான விவாதம் இன்று (06) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அதன்படி கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் முதன்முறையாக நடைபெற்றது.
ஊழல் தடுப்பு சட்டமூலம் மீதான விவாதம் இன்று மீண்டும் இடம்பெறும் என எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அதில் திருத்தங்களைச் சமர்ப்பிக்க கால அவகாசம் கோரப்படும் எனவும், விவாதத்தின் பின்னர் சட்டமூலம் நிறைவேற்றப்படும் எனவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஊழல் தடுப்பு சட்டமூலத்திற்காக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த பல திருத்தங்களுக்கு நியாயமான மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகம் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி மேலும் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், குறித்த சட்டமூலம் தொடர்பில் தமது கட்சி சமர்ப்பித்துள்ள திருத்தங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், அதற்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலிப்பதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்க நிதி தொடர்பான குழு, அரசாங்க கணக்குகள் தொடர்பான குழு, பொது வர்த்தகங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான குழு, நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழு என்பனவும் இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளன.