தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும், அதன் பணிப்பாளர் சபை பூர்த்தியற்று காணப்படுவதாகவும், அங்கு நிபுணர்களின் பற்றாக்குறை நிலவுவதாகவும்,
பிறப்பிக்கப்படும் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தாமை, தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும் மதிப்பீட்டுக் குழு மற்றும் நிபுணர் குழுக்களில் பங்கேற்பது போன்ற பல முறைகேடுகள் இடம்பெறுவதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரும் செயலாளரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (27) தெரிவித்தார்.
அரசாங்க மருந்தாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று(27) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து தெளிவூட்டினர்.
குறித்த தெளிவுபடுத்தலைத் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எமது நாட்டின் ஒளடதம் தொடர்பான சட்ட விதிமுறைகள் ஏற்பாடுகளின் பிரகாரம், மருந்துப் பொருட்களை பதிவு செய்வதற்கான முறையான செயல்முறை உள்ளதாகவும், அவசரகால சூழ்நிலையில் செயல்படுத்தப்பட வேண்டிய முறையொன்று இருந்தாலும் அந்த முறைமையை பயன்படுத்தி மருந்துப்பொருட்கள் பதிவு செய்யப்படுவதையும் தவிர்த்து தவறான முறையில் ஒளடத அதிகார சபையின் தலைவர் கொள்வனவு செய்திருப்பதாகவும், இதன் காரணமாக தரமற்ற மருந்துப்பொருட்களை சந்தைக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இங்கு அறிய கிடைத்தது.
இதன் காரணமாக கடந்த காலங்களில் பல்வகையான மருந்துபொருட்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாகவும், தமது மருந்து மாபியாவை பாதுகாக்கும் நோக்கில் இந்நிறுவனத்தின் சேவையாற்றிய 23 சிரேஷ்ட உறுப்பினர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்த எதிர்கட்சி தலைவர்,
இந்நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்களை வெளியிடக்கூடாது என்ற சுற்றுநிருபம் கூட வெளியிடப்பட்டுள்ளமை ஆச்சரியத்துக்குரிய காரணமாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மருந்து விலை ஒழுங்குமுறைக் குழுவை கலைத்து, பிரதம நிறைவேற்று அதிகாரி தனது சொந்த பிரப்பாணைகளின் பிரகாரம் விலை நிர்ணயம் செய்து வருவதாகவும், இந்த பெரும் நாசகாரத்தை நாட்டுக்கு வெளிப்படுத்துவதாகவும்,
பாராளுமன்றத்தின் கடமை மற்றும் பொறுப்பின் கீழ் அவர்கள் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
எதிர்க்கட்சியாக, 220 இலட்சம் மக்களுக்கும் இந்த ஊழல் கொடுக்கல் வாங்கல் கண்டறிதலை வெளிப்படுத்துவதாகவும், இது நாட்டிற்கு பெரும் பாதகமாக அமையும் என்பதால் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயப்பட்டு இது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.