follow the truth

follow the truth

September, 22, 2024
HomeTOP1பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு மனித உரிமைகள் பேரவையில் கோரிக்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு மனித உரிமைகள் பேரவையில் கோரிக்கை

Published on

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல் நஷீப் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஆதரவை வழங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை முன்வைக்கும் போதே பிரதி உயர்ஸ்தானிகர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சட்டம் கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற போராட்டங்களை பாதுகாப்புப் படையினர் கையாண்ட விதம் தொடர்பில் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் தனது ஆட்சேபனையையும் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தின் தலைவர்கள் கைது, நகைச்சுவை நிகழ்ச்சியின் போது பேசியதற்காக ஆட்களை கைது செய்தல், போராட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்தமை போன்ற விடயங்களும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ள பேச்சுவார்த்தை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர், தொன்மையான காடு அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக காணி சுவீகரிப்புகளை நிறுத்த எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் பாராட்டியுள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய நியமனங்கள் துரிதமாக நடைபெற வேண்டுமென சுட்டிக்காட்டிய பிரதி உயர்ஸ்தானிகர், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அல்லது அதுபோன்ற நல்லிணக்கப் பொறிமுறைக்கான திட்டங்களை அறிவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் முக்கிய குழுவும் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத் தொடருக்கான பிரேரணையை சமர்ப்பித்துள்ளது.

கனடா, மலாவி, மொன்டனீக்ரோ, வடக்கு மாசிடோனியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கூட்டாக இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேர்தல் முறைமைகளில் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பேணுவதுடன் ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் இலங்கை தனது பிரதி ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என அவர்கள் தமது அறிக்கையில் காட்டியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...