follow the truth

follow the truth

September, 22, 2024
HomeTOP2கடந்த ஆண்டை விட மக்கள் எளிதாக பொருட்களை வாங்க முடியும்

கடந்த ஆண்டை விட மக்கள் எளிதாக பொருட்களை வாங்க முடியும்

Published on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய விவசாயத்துறையில் தொழில்நுட்பத்தை இணைத்து ஏற்றுமதி விவசாய பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அதன் ஊடாக விவசாய அமைச்சு வெளிநாட்டு வருவாயை ஈட்டும் அமைச்சாக மாறும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விவசாய தொழிற்துறைக்கு அவசியமான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுத்தமையால் இம்முறை பெரும்போகத்தில் சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது என்று தெரிவித்த அமைச்சர், ஹெக்டெயார் ஒன்றில் அதிகளவான அறுவடையை பெற்றுக்கொள்வதற்கு அவசியமான தொழில்நுட்ப முறைமைகளை கண்டறியும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் விவசாய நிலங்களில் இருந்து போராட்ட களத்திற்கு சென்ற விவசாயி தற்போது மீண்டும் விவசாய நிலத்திற்கு வந்து தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் நுகர்வுத் தேவைக்காக அனைத்து விவசாயப் பொருட்களையும் வெற்றிகரமாக உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் விளைநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமவீர,

ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்ட போது உர வரிசை, எரிபொருள் வரிசை, எரிவாயு வரிசை போன்ற வரிசைகள் மாத்திரமே காணப்பட்டன. நான் விவசாய அமைச்சராக பதிவியேற்றுக்கொண்ட போதும் பாரிய சவாலொன்று காணப்பட்டது.

உள்நாட்டு விவசாயிகளுக்கு உரம் பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்கவில்லை. அந்த சவாலை ஏற்றுக்கொண்டு முதற்கடமையாக விவசாயிகளுக்கு உரத்தை பெற்றுக்கொடுத்தேன். ஜனாதிபதியின் அறிவுரைக்கமைய விவசாயிகளுக்கான அனைத்து சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதனால் தற்போது பெரும்போக விளைச்சல் போதியளவு கிடைத்துள்ளது. சிறுபோகத்திற்கு அவசியமான உரமும் தற்போது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

சில அரசியல் தலைவர்களே விவசாயிகளை ஆர்ப்பாட்ட களத்திற்கு இழுத்தார்கள் என்பது ரகசியமல்ல.

விவசாயிகளை விவசாய செயற்பாடுகளிலிருந்து விடுபடச் செய்து மக்களையும் பசியில் வாடச் செய்யும் அரசியல் சூழ்ச்சி செயற்பாடுகளையும் சிலர் முன்னெடுத்தனர். அந்த சவால்களுக்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் சாதகமான முறையில் முகம்கொடுத்தது.

ஜனாதிபதியின் விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் ஹெக்டெயார் ஒன்றில் பெற்றுக்கொள்ளக்கூடிய அறுவடையின் தொகையை அதிகரித்துக்கொள்ள முடிந்துள்ளது. சில விவசாயிகள் குறிப்பிட்ட பருவகாலங்களில் 11 ஆயிரம் கிலோவை அறுவடை செய்துள்ளதோடு மரக்கறி மற்றும் பழங்கள் உற்பத்திச் செயற்பாடுகளிலும் புதிய தொழில்நுட்பத்தை உள்ளீடு செய்வதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதன்கீழ் இலங்கை மக்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பின்னர் வெளிநாட்டு வருமானத்தை ஈட்டக்கூடிய வலுவான திட்டமிடல் ஒன்றை தயாரிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் வெளிநாட்டு வருமானத்தை ஈட்டக்கூடிய விவசாய அமைச்சு ஒன்றை உருவாக்குவதே தமது நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு சலுகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். முட்டை வியாபாரம் மற்றும் விவசாயம் தற்போது நல்ல நிலைக்கு வருகின்றது. மக்கள் பட்டினியால் வாடுவதாக ஊடகங்கள் முன் கூறி மக்களைத் தூண்டிவிடும் நோக்கில் சில எதிர்க்கட்சிக் குழுக்கள் செயற்படுகின்றன.

ஆனால் இலங்கையில் பசியால் யாரும் இறப்பதில்லை. ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்ற போது இருந்த அரிசியின் விலைக்கும் தற்போது அரிசியின் விலைக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. இப்போது வெள்ளைப் பச்சரிசி ஒரு கிலோவை நீங்கள் 125 முதல் 130 ரூபாவுக்கு வாங்கலாம். கட்டுப்பாட்டு விலைக்கும் குறைவான விலைக்கு அரிசியை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுப்போம். அதன்படி, கடந்த ஆண்டை விட மக்கள் எளிதாக பொருட்களை வாங்க முடியும்.

வன விலங்குகளால் விவசாயத்திற்கு அதிகளவில் சேதம் ஏற்படுகின்றது. கடந்த வருடம் மாத்திரம் 03 மில்லியன் தேங்காய்கள் குரங்குகளினால் சேதமடைந்துள்ளன. ஆனால் இதுபற்றிப் பேசும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விவசாய அமைச்சிடம் இது வரை குரங்குகளின் பிரச்சினைக்கு வெற்றிகரமான தீர்வு எதனையும் முன்வைக்கவில்லை. ஆனால் உலக நாடுகளில் விலங்குகள் பெருகியபோது அவற்றைக் கொன்று விலங்குகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் நம்மால் அவ்வாறு செய்ய முடியாது. எனவே, அனைவரும் சேர்ந்து கலந்துரையாடி இதற்கு விரைவான தீர்வை வழங்க வேண்டும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...