கேரளாவில் பெய்து வரும் கனமழையுடனான காலநிலை காரணமாக சபரிமலை கோயிலுக்கு செல்ல, நாளை மறுதினம் வரை பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்புநிலை ஸ்தம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ஆங்காங்கே மண்சரிவும் ஏற்பட்டிருப்பதால், பிற பகுதிகளிலிருந்து சாலைகளில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன. இதனால், ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் பத்தனம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல, நாளை மறுதினம் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்களின் பாதுகாப்புக்காக கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அதேபோல், நாளை (18ஆம் திகதி) பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கேரளாவில் பெய்துவரும் கனமழையினால் இதுவரையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 10 இற்கும் மேற்பட்டோர் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.