14 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 2 ஆவது தகுதிகாண் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் இறுதி போட்டிக்கு தகுதிபெறும் இரண்டாவது அணியை தெரிவு செய்யும் தகுதிக்காண் சுற்றுப்போட்டி இன்று இடம்பெற்றது.
அதற்கமைய, வெளியேறல் சுற்றில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், முதலாவது தகுதிகாண் போட்டியில் தோல்வியடைந்த டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியும் இன்று மோதின.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களை பதிவுசெய்தது.
இந்நிலையில், 136 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
அதற்கமைய, ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தெரிவாகியுள்ளது.
முன்னதாக முதலாவது தகுதிகாண் போட்டியில் டெல்லி அணியை தோற்கடித்த மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர்கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.
இந்நிலையில், நாளை மறுதினம் (15) இடம்பெறவுள்ள மாபெரும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.