தென்மேற்கு வங்காள விரிகுடாவுடன் இணைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை இலங்கையின் கிழக்கு கரையை அடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பல பிரதேசங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.
அத்துடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.