ரயில்வே துறைக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் காணிகளை நிர்வகிப்பதற்கு விசேட பிரிவை அமைக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன ரயில்வே அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு தற்போது நாடு முழுவதும் 14,000 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் உள்ளதாகவும், அதில் 8,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு புகையிரத நிலையங்களுக்கும் ஏனைய நிர்வாகத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், சொத்து முகாமைத்துவம், சுமார் 5,000 ஏக்கர் காணி இருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
அவற்றினை குத்தகை அடிப்படையில் வழங்க முடியும் என்றாலும் 1,500 ஏக்கர் மட்டுமே குத்தகை ஒப்பந்தத்தில் வெளி தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரியவந்தது. புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை எவ்வித சட்டபூர்வ உரிமையோ அல்லது குத்தகை ஒப்பந்தமோ இன்றி சட்டவிரோதமாக அனுபவிக்கும் நபர்களை இனங்கண்டு அவர்களிடமிருந்து புகையிரத திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய குத்தகை பணத்தை விரைவாக பெற்றுக்கொள்ளும் முறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
ரயில்வேக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் காணிகளை நிர்வகிப்பதற்கு தனியான பிரிவொன்றை விரைவில் அமைக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியிருந்தார்.