ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் பொரளை பொலிஸாருக்கு மேலதிகமாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தவிர புலனாய்வு அமைப்புகளும் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுவரை, பொரளை பொலிஸார் அவரது மனைவி டானி ஷாப்டர், நிர்வாக அதிகாரி, பல பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மயானத்தின் பணியாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, பணிப்பாளர் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் காரின் இலத்திரனியல் தரவுகளையும், அவர் பயன்படுத்திய மொபைல் போன், குறிப்பாக சிசிடிவி கேமரா காட்சிகளையும் சரிபார்க்க விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிரதான வாயிலின் ஊடாக அவர் தனியாக மயானத்திற்குள் பிரவேசித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 3 வருடங்களுக்கு முன்னர், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருக்கு வர்த்தக நோக்கத்திற்காக பணிப்பாளர் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாவை வழங்கியது மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலை காரணமாக, பணிப்பாளர் கிரிக்கெட் வர்ணனையாளருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மூன்று முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளாரென அறியப்படுகிறது.
நேற்று (15) பிற்பகல் 1.30 மணியளவில் குருந்துவத்தை மல் வீதியிலுள்ள தனது வீட்டில் இருந்து குறித்த பணத்தை பெற்றுக்கொண்ட பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரை சந்திக்க செல்வதாக மனைவி மற்றும் நிர்வாக அதிகாரியிடம் கூறிவிட்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறிது நேரத்தில் அவரது மனைவி அவருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும், பின்னர் அவரது தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் மனைவியின் கையடக்கத் தொலைபேசிக்கு அவர் பொரளை மயானத்தில் தங்கியிருப்பதாக சமிக்ஞைகள் கிடைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி மனைவி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஒருவரிடம் கூறி அவரை பொரளை மயானத்திற்கு அனுப்பி வைத்து விசாரணைக்கு வந்த போது இயக்குனரின் காரின் சாரதி இருக்கையில் கைகள் கட்டப்பட்டு கழுத்தில் கம்பி கட்டப்பட்டிருந்ததை கண்டுள்ளார்.
அப்போது பணிப்பாளர் சுயநினைவிழந்த நிலையில் இருந்ததால், உடனடியாக மயானத்தில் இருந்த கூலித்தொழிலாளி உதவியுடன் செயல்பட்ட செயல் அலுவலர், அவரது கை, கழுத்தில் இறுக்கமாக கட்டப்பட்டிருந்த கம்பிகளை அகற்றி அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். மாலை சுமார் 5.15 மணி என்று மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
செயற்கை சுவாசத்தை வழங்குவதற்கு தேவையான உபகரணங்களை வைத்தியர்கள் பொருத்தி இரண்டு அதிதீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு அனுப்பி வைத்த போதிலும், கவலைக்கிடமான நிலையில் இருந்த பணிப்பாளர் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இறக்கும் போது அவர் 51 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
மிகத் திட்டமிட்ட முறையில் பணிப்பாளரை மயானத்திற்கு வரவழைத்து ஒரு குழுவினர் இந்தக் கொடூரக் குற்றத்தை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக விசாரணைகளை நடத்தும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து நெரிக்கப்பட்ட சம்பவம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு இலக்கம் 2 நீதிமன்ற பதில் நீதவான் சம்பத் ஜயவர்தனவின் உத்தரவின் பேரில் சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரி ரூல் ஹக்கினால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.