சட்டத்திற்கு முரணாக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையை நிதியமைச்சரும் மின்சக்தி அமைச்சரும் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.
2022 ஓகஸ்ட் மாதம் மின் கட்டணம் திருத்தியமைக்கப்படும் பின்னணியில் 2023 ஜனவரி முதலாம் திகதியும் மீண்டும் 2023 ஜூன் மாதமும் மின் கட்டணத்தை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.
மின்சாரச் சபை மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் செய்ய வேண்டுமாயின் அதற்குரிய பிரேரணையை முதலில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து, அதற்குத் தேவையான கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்று மின்சாரம் வழங்கப்பட வேண்டுமென விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.
2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் பிரிவு 30 இன் விதிகளை மீறி அமைச்சரவையில் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார். கவனக்குறைவால் நுகர்வோர் மீது நட்டத்தை சுமத்துவது நியாயமற்றது மற்றும் சட்டவிரோதமானது என அவர் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டில் பாரிய பொருளாதார வளர்ச்சி வீதத்தை எதிர்பார்ப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் மின் கட்டணத்தை அதிகரிப்பது நகைப்புக்குரியது என தலைவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கைக்கு முதலீட்டாளர்கள் வருவதற்கான உட்கட்டமைப்பு மற்றும் சேவைக் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும், உற்பத்தி காரணிகளின் விலை குறைக்கப்பட்டால் மட்டுமே உள்ளூர் கைத்தொழிலாளர் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றும் ரஞ்சித் விதானகே கூறுகிறார்.
தற்போதைய அமைச்சரின் காலத்தில் இரண்டு முறை மின்கட்டணத்தை உயர்த்தியது அந்த அமைச்சரின் தோல்வியையே காட்டுகிறது என்று கூறிய அவர், நிறுவனம் நஷ்டம் அடையும் போது கட்டணத்தை அதிகரித்து வாடிக்கையாளரிடம் இருந்து நஷ்டத்தை வசூலிக்கும் அமைச்சர் இருப்பதில் அர்த்தமில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
அமைச்சரிடம் நியாயமான விலையில் மின்சாரம் கிடைக்கும் என மின் நுகர்வோர் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணையை மீளப்பெறுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் ரஞ்சித் விதானகே மேலும் தெரிவித்தார்.