நெருக்கடிகளால் சூழப்பட்டுள்ள இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப குறைந்தது ஐந்து வருடங்களாவது ஆகும் எனவும், 6 மாதத்தில் இந்நாட்டை கட்டியெழுப்புவோம் எனக் கூறும் பேச்சு மாயையானது எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளை 5 நாட்களில், 5 மாதங்களில் உடனடியாக தீர்க்க முடியாது. அவ்வாறு கூறும் பொய்களை நம்பி ஏமாற வேண்டாம். இந்நாட்டு மக்களை தொடர்ந்தும் யாரேனும் ஏமாற்றவோ அல்லது தவறாக வழிநடத்தவோ முயற்சித்தால் அது துரதிஷ்டவசமான நிலை என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கத்தால் தொடர்ந்து நாட்டை முன் கொண்டு செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகுவதை தவிர வேறு வழியில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.