ஐக்கிய மக்கள் சக்தி, கண்டியிலிருந்து கொழும்புக்கு ஆரம்பித்துள்ள பேரணியின் இரண்டாம் நாள் இன்றாகும்.
நேற்றைய தினம் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
இந்தநிலையில், கடுகண்ணாவை நகருடன் நேற்று பேரணி நிறைவடைந்த நிலையில், இன்று அங்கிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு வழங்கும் விதமாக, ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது.
இந்தப் பேரணி, மே தினத்தன்று, கொழும்பை வந்தடைய உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம், கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 19ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.
இதேநேரம், அலரிமாளிகைக்கு முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், நேற்றைய தினம் மைனாகோகம என்ற பெயரில், தங்களின் போராட்டக் களத்தை அடையாளப்படுத்தியுள்ளனர்.
இந்தப் போராட்டம் இன்றைய தினமும் முன்னெடுக்கப்படுகிறது.