புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் என்ற வகையில் தனக்கு இரண்டு கடினமான பொறுப்புகள் உள்ளதாக அமைச்சரவை அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
முதல் கடமை என்பது கடினமான முடிவு என்று கூறிய விஜேசேகர, நாளாந்த இழப்பான 1.6 பில்லியன் ரூபாவை குறைக்கும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட வேண்டும் என்றார்.
எரிசக்தியில் உரிய நேரத்தில் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கும், எரிபொருளை பரவலாகக் கிடைக்கச் செய்வதற்கும், எரிபொருள் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இரண்டாவதாக, மின்துறை அமைச்சர் என்ற ரீதியில் அமைச்சு தொடர்பான பிரச்சினைகளை சீர்செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
“மின் உற்பத்திக்கு போதுமான எரிபொருளை கிடைக்கச் செய்தல், தடையில்லா மின்சாரம் வழங்குதல், விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பணிகளை விரைவுபடுத்துதல், மின் உற்பத்திக்கான செலவு சூத்திரம், இயற்கை வளங்களைப் பயன்படுத்துதல் மற்றும் கட்டத் திறனை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்று அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.
வேலை மற்றும் முடிவுகள் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் சரி, சரியான முடிவுகளை எடுப்பதே தனது நோக்கமாக இருக்கும் என்றார்.
இன்று எதிர்நோக்கும் மின்சாரம் மற்றும் எரிசக்தி நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கும் எதிர்காலத்திற்கான உறுதியான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் பங்களிக்கக்கூடிய எவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.