நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டம் காரணமாக காக்கப்பள்ளி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் கட்டுநாயக்க 18ஆம் மைல் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதோடு கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகள் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அவிஸ்ஸாவலை நகர் பகுதியிலும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.
கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகள் குறித்த பகுதியில் திருப்பி அனுப்ப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, கித்துல்கல பகுதியிலும் ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகள் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கொழும்பு – பதுளை பிரதான வீதியை மறித்து ஹப்புத்தளை நகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு குறித்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.