தன்னுடைய பாதுகாப்புக்காக வருகைத் தந்த கட்சி ஆதரவாளர்களில் ஒருவரே வாகனத்திற்குள் நுழைந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
நேற்று இலக்கத்தகடுகள் இன்றி நாடாளுமன்றிற்குள் பிரவேசித்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விவாதங்கள் இடம்பெற்றுவந்த நிலையில், அனுர குமார எம்.பியின் வாகனத்திற்குள் நுழைந்த நபரும் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது பேசும் பொருளாக காணப்பட்டிருந்தது.
ஆளுங்கட்சி பிரதான கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கும் விஜித ஹேரத் எம்.பிக்கும் இடையே இது குறித்து நீண்டநேரமாக காரசாரமான வாதங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த தருணத்தில் அனுர குமார எம்.பி சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
இதனையடுத்து, சபைக்குள் பிரவேசித்த அனுரகுமார எம்.பி. தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே இந்த விடயத்தை வெளியிட்டார்.