இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான, மலையக தமிழர்கள் சார்பான அபிலாசைகள் அடங்கிய ஆவணம், தமிழ் முற்போக்கு கூட்டணியினரால் இன்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்பட்டது.
கொழும்பு இந்திய இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வே. ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார், கே.டி. குருசாமி, பேராசிரியர் சோ. சந்திரசேகரம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்திய தரப்பில் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜேகப், அரசியல் துறை செயலாளர் பானு பிரகாஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இதன்போது, மலையக தமிழர்கள் தொடர்பான கூடிய அக்கறையை செலுத்த மோடி அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இதன்போது, மலையக தமிழர்கள் தொடர்பான கூடிய அக்கறையை செலுத்த மோடி அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இந்த பின்னணியில், ஏனையோருடன் சமத்துவமாக வாழ விரும்பும் மலையக மக்கள் தொடர்பான இந்த அதிகாரபூர்வ ஆவணம் மிகவும் பயன்தருகிறது என அவர் மேலும் கூறியுள்ளார்.
மலையக தமிழ் மக்களின் அனைத்து அபிலாசைகளையும் ஒருசேர பிரதிபலிக்கும் கோரிக்கைகள் உள்ளடங்கிய இத்தகையை ஆவணத்தை தயாரித்து முன்வைத்துள்ளமை தொடர்பில் மகிழ்ச்சிகளையும், பாராட்டுகளையும் உயர்ஸ்தானிகர் தெரிவித்ததாகவும், இந்த அபிலாசை ஆவண கடிதத்தை உடனடியாக பிரதமர் நரேந்திர மோடியின் அவதானத்துக்கு முறைப்படி அனுப்பி வைப்பதாக உயர்ஸ்தானியர்கள் உறுதியளித்ததாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் இனி வரும் எதிர்காலத்தில், இந்திய மற்றும் தமிழக அரசியல், சமூக, பரப்புகளில் மலையக தமிழர்கள் அதிக கவனத்தை பெற வேண்டும் எனவும், அதற்கான ஒத்துழைப்புகளை இந்த அரசு சார்பில் இந்திய உயர்ஸ்தானிகரகம் வழங்கும் எனத் தூதுவர் மேலும் கூறியுள்ளார்.
அடுத்த வாரம் இலங்கை வருகைதரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இந்த ஆவணம் குறித்து கலந்துரையாடுவார். பிம்ஸ்டெக் (BIMSTEC) மாநாடு முடிந்த உடன், இந்த ஆவண கோரிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாட விரும்புவதாகவும் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மேலும் தெரிவித்தார்.