கிழக்கு மாகாணம் உள்ளிட்ட ஆறு பகுதிகளில் இன்று (30) பகல் வேளையில் மனித உடலினால் அதிக வெப்பநிலையை உணரக்கூடிய நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கிழக்கு மாகாணத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், இரத்தினபுரி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
கடற்பரப்புகளைப் பொறுத்தவரை, சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்பிலும், கற்பிட்டியிலிருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
மேலும், கற்பிட்டி முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
