யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘அபினவ நிவஹல் பெரமுன’ கட்சியின் தலைவர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்துள்ள இந்த மனு, இன்று (02) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மஹேன் கோபல்லவ முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அசோக் பரன், மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அருகிலுள்ள திகதியை நிர்ணயிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளை, எதிர்மனுதாரரான பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, அந்தக் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இதையடுத்து, குறித்த மனுவை எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதியரசர் உத்தரவிட்டார்.
மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட காலப்பகுதியில் அரசாங்க வைத்தியராக பணியாற்றி வந்ததாகவும், அரசியலமைப்பின் ஏற்பாடுகளின்படி அரசாங்க ஊழியர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாக முடியாது என்பதால், அவர் அந்தப் பதவியை வகிப்பதற்கான தகுதியை இழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
