இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான பென் ஸ்டோக்ஸ், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் வாய்ப்பை பரிசீலித்து வருகிறார் என்ற தகவல் கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி முடிந்ததையடுத்து, பென் ஸ்டோக்ஸ் மற்றும் சக வீரர் கஸ் அட்கின்சன் இருவரும் இரவு நேர விடுதியில் கலந்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இது அணியின் ஒழுக்க விதிமுறைகளை மீறிய செயல் எனக் கருதி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில், ஸ்டோக்ஸ் தன்னார்வமாக கேப்டன் பதவியை விலகி, டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் வீரராக தொடரும் வாய்ப்பும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, ஒழுக்க விதிமுறை மீறல் உறுதி செய்யப்பட்டால், அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில், 35 வயதான பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தே முழுமையாக ஓய்வுபெறுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஜூன் 17 ஆம் தேதி லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் அடுத்த கட்ட முடிவுகள் குறித்து கிரிக்கெட் உலகம் கவனமாக எதிர்பார்த்து வருகிறது.
