மட்டக்களப்பு நகரிலுள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று (27) பிற்பகல் ஏற்பட்ட இந்த தீப்பரவலின் போது வெளியான நச்சுப் புகையால், விடுதியின் அறையில் தங்கியிருந்த இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மட்டக்களப்பில் உள்ள வைத்தியசாலையில் அவர்களது தாய் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தாயை பார்வையிடுவதற்காக, தந்தையுடன் பதுளையிலிருந்து இரண்டு பிள்ளைகளும் மட்டக்களப்புக்கு வந்திருந்தனர்.
அவர்கள் தங்கியிருந்த அறையில் இரண்டு பிள்ளைகளையும் விட்டுவிட்டு தந்தை வெளியில் சென்றிருந்த நேரத்தில் விடுதியில் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 3 வயதுடைய ஆண் குழந்தையும், 5 வயதுடைய பெண் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
