அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள நான்கு நாள் அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது, அமெரிக்க தூதரக சேவைகளை நவீனமயமாக்கும் நோக்கில் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, “America First” எனப்படும் புதிய Visa Scheduling Tool அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், இந்தியப் பயணிகளுக்கான அமெரிக்க விசா நேர்காணல் முன்பதிவில் முன்னுரிமை வழங்குவதாகும். இதன் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விரைவான நேர்காணல் சந்தர்ப்பம் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, வணிக மற்றும் முதலீட்டு நோக்கங்களுக்காக அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு இந்த புதிய முறை பெரும் நன்மையாக அமையும் என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனங்களுடன் புதிய வணிக ஒப்பந்தங்களை ஏற்படுத்த விரும்புவோர், அமெரிக்காவில் தங்களது வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்த திட்டமிடும் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க சந்தைகளில் முதலீடு செய்ய விரும்பும் இந்திய தொழில்முனைவோர் இந்த திட்டத்தின் கீழ் அதிக பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே அமெரிக்காவில் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளன என்றும் மார்கோ ரூபியோ சுட்டிக்காட்டியுள்ளார்.
