கட்டாருக்கு இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து வீட்டுப்பணிப்பெண்கள் பணிகளுக்கு அமர்த்தப்படும்போது அவர்களுக்கான ஆகக்கூடிய வருடாந்தக் கொடுப்பனவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கட்டாரின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
ஆட்சேர்ப்பு செலவுகளில் நியாயமற்ற அதிகரிப்புக்கு எதிரான கூட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக அதிகபட்ச கொடுப்பனவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் வீட்டுப் பணியாளர்கள் மற்றும் வீட்டுத் தொழிலாளர் சந்தையைக் கட்டுப்படுத்தமுடியும் என்று கட்டாரின் அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருக்கிறது.
இதன்படி இலங்கையர்கள் 17ஆயிரம் ரியாலுக்கும், இந்தோனேசியர்கள் 17ஆயிரம் ரியாலுக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் 15ஆயிரம் ரியாலுக்கும், பங்களாதேஸியர்கள் 14ஆயிரம் ரியாலுக்கும், இந்தியர்கள் மற்றும் கென்யா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் பணியாளர்கள் 9ஆயிரம் ரியாலுக்கும் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்று கட்டாரின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் அதிகாரபூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திகதிக்கு அடுத்த நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் இந்தத் தீர்மானத்தை, அனைத்து தகுதிவாய்ந்த அதிகாரிகளும் செயல்படுத்த வேண்டும் என்று கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.