கம்பளை, புப்புரஸ்ஸ – டெல்டா வடக்கு (டேசன்) தோட்டப் பகுதி மக்கள் இன்று (30) இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘டித்வா’ பேரிடரால் குறித்த தோட்டத்தில் பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகளை அமைத்து கொடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.
பிற இடங்களில் உள்ளவர்களுக்கு தமது தோட்டப் பகுதியில் வீடுகளை அமைத்து கொடுப்பதற்கு முன்னர் தமக்கு வீடுகளை வழங்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
டேசன் தோட்டத்தில் டித்வா பேரிடலால் வீடுகளை இழந்த குடும்பங்கள், தற்காலிகமாகத் தோட்டப் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்தன.
இருப்பினும், பாடசாலை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தற்போது உறவினர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளில் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் டேசன் தோட்டப் பகுதியில் ஒதுக்கப்பட்ட அரச காணியில், வேறு பகுதியைப் சேர்ந்த சில குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த நடவடிக்கைக்குத் தோட்ட மக்களும், பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
வீடுகளை இழந்த தமக்கு அந்த வீட்டுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அவர்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
