Homeஉள்நாடு‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்" நாளை ஆரம்பம்!

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” நாளை ஆரம்பம்!

– நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம்.

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், “தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நாளை (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இலங்கையை நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த (cash-lite) பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இதற்கமைய நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணத்தை (Merchant Discount Rate) முழுமையாக நீக்குவதற்கு நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன் மூலம் சிறு வர்த்தகர்கள் எவ்வித கூடுதல் செலவுமின்றி டிஜிட்டல் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தற்போது இலங்கையில் மிகவும் வலுவான டிஜிட்டல் நிதி உட்கட்டமைப்பு காணப்படுவதுடன், நாட்டின் வயதுவந்த மக்களில் 89% பேருக்கு வங்கி வசதிகள் உள்ளன. மேலும், ஒரு காலாண்டில் 6.3 டிரில்லியன் ரூபாய் பெறுமதியான 68 மில்லியன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் CEFTS கட்டமைப்பும், 20-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 450,000 வர்த்தக நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள LankaQR கட்டமைப்பும் இன்று செயலில் உள்ளன.

இருப்பினும், பொருளாதாரத்தில் இன்னும் 1.48 டிரில்லியன் ரூபாய் பெறுமதியான நாணயத்தாள்கள் புழக்கத்தில் உள்ளன. 2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு நிலவரப்படி, LankaQR மூலம் மாதத்திற்கு சுமார் 395,000 ரூபாய் பெறுமதியான மிகக்குறைந்த அளவிலான கொடுக்கல் வாங்கல்களே இடம்பெற்றுள்ளன. இந்த இடைவெளியைக் குறைப்பதற்காக நாளை ஆரம்பிக்கப்படும் இத்திட்டத்தின் கீழ் சில விசேட மூலோபாயங்கள்
நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், QR பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்காக விசேட அதிர்ஷ்ட லாபப் போட்டித் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் வாராந்தம் மற்றும் மாதாந்தம் வெற்றிபெறும் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு 1,000,000 ரூபாய் வரையிலான பெறுமதியான பரிசுகளை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

இத்திட்டத்தின் வெற்றிக்காக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேசிய அளவிலான பிரச்சார நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள “சமூக கற்புல சுட்டெண்” (Social Visibility Index) மூலம் இத்திட்டத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொழில்நுட்ப ரீதியான ஒரு நடவடிக்கை மட்டுமல்லாது, நாட்டின் எதிர்கால கொடுப்பனவு முறையை டிஜிட்டல் மயப்படுத்தி, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பொருளாதாரமாக மாற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.

QR கொடுப்பனவுகள் ஆரம்பிக்கப்படுவதன் ஊடாக வேகமான, பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான டிஜிட்டல் பரிமாற்றம் பழக்கத்தை ஏற்படுத்தி எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பங்காளிகளாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular