Homeஉள்நாடுஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த ஊழியர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வுகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும், அதுவரை, அனைத்து தரப்பினரும் புரிந்துணர்வுடன் செயல்பட்டு, எதிர்பார்க்கும் நோக்கங்களை அடைவதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவார்கள் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த ஊழியர்களுக்குரிய அனைத்து உரிமைகளும் புதிய நிறுவனங்களுக்குள் உறுதிப்படுத்தப்படுவதையும், நிறுவனங்களின் கீழ் ஊழியர் உரிமைகளைப் பாதுகாப்பதையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த இடைப்பட்ட காலத்தில் புரிந்துணர்வுடன் செயல்பட்டு தமது பங்களிப்பை வழங்குமாறு அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புச் செயற்பாட்டின் போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மத்திய கிழக்கின் போர் நிலைமையையும் அதைக் கையாள்வதில் எழுந்துள்ள சவால்களையும் தாம் புரிந்துகொள்கிறோம் என்றும், இந்த நேரத்தில் அரசாங்கத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தும் அல்லது அரசியல் நோக்கங்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்றும் சுட்டிக்காட்டிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இந்த மறுசீரமைப்பு செயல்முறையை மிகவும் சரியாக நிறைவுசெய்வதற்கு பங்களிப்பதாகவும் தெரிவித்தனர்.

புதிய நிறுவனங்களில் முறையான நியமனக் கடிதத்தைப் பெறுவதும், கூட்டு ஒப்பந்தத்தின் தேவையும் இந்த செயல்பாட்டில் தாம் எதிர்கொண்ட இரண்டு முக்கிய பிரச்சினைகள் என்று சுட்டிக்காட்டிய தொழிற்சங்க பிரதிநிதிகள், அண்மையில் வலுசக்தி அமைச்சருடன் நடந்த கலந்துரையாடலின் போது இந்த பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாகவும், இது தொடர்பாக ஜனாதிபதியின் தலையீட்டை எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே புதிய நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே கூட்டு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சருடனான கலந்துரையாடலில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி, விரைாக அமைச்சரவையில் சமர்ப்பித்து, அங்கீகாரம் பெற்று அதை செயல்படுத்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

கூட்டு ஒப்பந்தத்தை எட்டும்போதும், தீர்க்கப்படாத பழைய பிரச்சினைகளைத் தீர்க்கும்போதும், தொழிற்சங்கங்களும் நிர்வாக அதிகாரிகளும் நடுநிலைமையில் இருந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மேலும் விளக்கினார்.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதன் நோக்கங்களை விளக்கிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரசாங்கத்தின் அனைத்து எதிர்கால பொருளாதாரத் திட்டங்களும் முழுமையாக வலுசக்தியை மையமாகக் கொண்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.

எனவே, இந்நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய காரணியாக வலுசக்தித் துறை மாறி வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த சவாலை வெற்றிகொள்ள வலுசக்தி துறையை தயார்படுத்துவதில் வலுவான நிறுவனக் கட்டமைப்பின் அவசியம் உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மின்சார சபையிடம் உள்ள தரவுகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மையால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை குறித்தும் விளக்கிய ஜனாதிபதி, இந்த மறுசீரமைப்புச் செயல்பாட்டின் போது முறையான தரவு கட்டமைப்பை நிறுவுவது மற்றும் இத்தகைய துறையில் பேணப்பட வேண்டிய உயர் மட்ட நிதி ஒழுக்கம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

மேலும், இலக்குமயப்பட்ட ஊழியர் செயல்திறனை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக அண்மைய டித்வா சூறாவளி போன்ற அவசர நிலைமைகளின் போது இலங்கை மின்சார சபை ஊழியர்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பை இதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டினார்.

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular