Homeஉள்நாடுஈரானிய கப்பல் குழுவினரை அனுப்பக் கூடாது- இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்?

ஈரானிய கப்பல் குழுவினரை அனுப்பக் கூடாது- இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்?

ஈரானிய கடற்படைக் கப்பல்களில் இருந்தவர்களை, ஈரானுக்கு அனுப்பக் கூடாதென, இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடற்படையால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலில் இருந்து உயிர் தப்பியவர்களையும், சிறிலங்காவின் காவலில் உள்ள இரண்டாவது ஈரானிய கப்பலின் பணியாளர்களையும் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று, இலங்கை அரசாங்கத்தை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.

மார்ச் 6 நாளிடப்பட்ட, முன்னர் அறிவிக்கப்படாத, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உள்ளக அறிக்கையில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரியான, ஜெய்ன் ஹோவெல், ஐஆர்ஐஎஸ் புஷேர் கப்பல் குழுவினரையோ அல்லது ஐஆர்ஐஎஸ் டெனாவில் இருந்து தப்பிய 32 பேரையோ ஈரானுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று இலங்கை
அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருப்பதாக அந்த உள்ளக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதிகளை பரப்புரைக்காக பயன்படுத்தும் ஈரானிய முயற்சிகளை சிறிலங்கா அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்துக்களை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திடம் கோரிய போதும், உடனடியாக பதிலளிக்கவில்லை.

அதேவேளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அலுவலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளும், உடனடியாக கருத்து தெரிவிக்க முன்வரவில்லை.

கப்பல் குழுவினரை ஈரானுக்கு திருப்பி அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று, இந்தியா மற்றும் சிறிலங்காவிற்கான இஸ்ரேலிய தூதுவரிடம், அமெரிக்க பிரதிநிதி ஹோவெல் தெரிவித்ததாக உள்ளக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையை விட்டு வெளியேறுவதை ஊக்குவிக்கும் வகையில் குழுவினருடன், ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று, ஹோவலிடம் இஸ்ரேலிய தூதுவர் கேட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் பிரதிநிதி இதுகுறித்த கேள்விக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.

இரண்டாவது கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர், மோதல் நடைபெறும் காலம் முழுவதும் இலங்கையில் காவலில் இருக்கும் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உள்ளக அறிக்கை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular