Homeஉலகம்கனடாவில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு - 10 பேர் பலி

கனடாவில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பாடசாலையில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணும் 9 பேரைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் டம்ளர் ரிட்ஜ் நகரத்தில் சுமார் 2,400-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை 175 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்குள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து பள்ளியைச் சோதனை செய்ததில் 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், குடியிருப்புப் பகுதியில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளியில் சடலமாக மீட்கப்பட்ட 8 பேரில் உள்ள பெண்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அந்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, டம்ளர் ரிட்ஜ் பள்ளி துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் கனடா பிரதமர் மார்க் கார்னி, உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular