Homeஉள்நாடுஇந்திய நிதி அமைச்சரை சந்தித்தார் சஜித்!

இந்திய நிதி அமைச்சரை சந்தித்தார் சஜித்!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, புது டில்லியில் அமைந்துள்ள நிதி அமைச்சில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தியா போன்ற பெரிய சந்தை வாய்ப்புகளை அணுகுவதன் மூலம் இலங்கையின் தொழிற்துறையை வேகமாக முன்னேற்றம் காணச் செய்ய முடியும் என்று இந்திய நிதி அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

வலுவான உள்நாட்டு தொழிற்துறைகள் மூலம் இலங்கையின் பொருளாதார இறையாண்மையை மேம்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2022 இல் ஏற்பட்ட நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய 4 பில்லியன் அமெரிக்க டொலர் ஒத்துழைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நன்றிகளை இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், ஒரு தனி நாடாக இலங்கைக்கு வழங்கிய மிகப்பெரிய நிதி மானியம் இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழிற்துறை கொள்கை மற்றும் டிஜிட்டல் ஆளுகை தொடர்பில் இந்தியாவின் சாதனைகளை பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர், ஒப்பீட்டு ரீதியாக நிலைத்தன்மை காணப்பட்ட போதிலும், இலங்கை இன்னும் வெளிநாட்டு கையிருப்புக்களை மீண்டும் கட்டியெழுப்புதல், ஏற்றுமதிகளை பன்முகப்படுத்தல் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

வெளிப்படையான மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான ஒத்துழைப்பின் அவசியப்பாடு தொடர்பில் இரு தரப்பினரும் இங்கு இணங்கிக் கொண்டனர்.

கூட்டு முயற்சியாண்மைகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கு இந்தியா-இலங்கை தொழிநுட்பம் சார் கைத்தொழில் வலயத்தை உருவாக்கும் யோசனையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது முன்வைத்தார்.

 

நவீன வர்த்தக யதார்த்தங்களுக்கு ஏற்றவாறு இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்வதற்கும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular