Homeஉள்நாடுநேபாளத்தில் கட்டுக்கடங்காத கலவரம்!

நேபாளத்தில் கட்டுக்கடங்காத கலவரம்!

 

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதித்த தடைக்கு எதிரான கலவரம், இரண்டாவது நாளான நேற்று உச்சமடைந்தது.

நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டிற்கு கலவர கும்பல் தீ வைத்தது. இதில், வீட்டிலிருந்த அவரது மனைவி ராஜ்யலட்சுமி உயிரிழந்தார்.

இரண்டாவது நாளாக நேற்று கலவரம் உச்சமடைந்தது. இதில் தலைநகர் காத்மாண்டு சின்னாபின்னமானது.

சமூக வலைதள தடைக்கு எதிராக துவங்கிய போராட்டம், அரசின் ஊழல், வாரிசு அரசியல் போன்றவற்றுக்கு எதிரான கலவரமாக உருமாறியது.

காத்மாண்டுவில் உள்ள நேபாள நாடாளுமன்ற வளாகத்திற்குள் நேற்று நுழைந்த இளைஞர்கள், மேற்கு நுழைவாயிலை உடைத்து உள்ளே நுழைந்து, தீ வைத்தனர். அதன் அருகில் உள்ள நேபாள அரசின் செயலகமான சிங்க தர்பார், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றையும் தீ வைத்து எரித்தனர்.

இந்த கலவரங்களில் ஆளும் கூட்டணி கட்சிகளின் அலுவலகங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன.
நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகள் அலுவலகங்களை இளைஞர்கள் சூறையாடினர்.

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதற்குள் தலைநகரில் நிலைமை மோசமானது. இதனால் ராணுவம் தலையிட்டு, நிலைமையை சீராக்க வேண்டும் என ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெலிடம் பிரதமர் ஒலி வலியுறுத்தினார்.

அதற்கு ராணுவ தளபதி, பிரதமரை பதவி விலகும்படி அறிவுறுத்தினார். அப்போது தான் நிலைமையை கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறியுள்ளார். இதையடுத்தே பிரதமர் ஒலி, தன் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
அவருடன் ஜனாதிபதி ராம் சந்திர பவுதா மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலரும் பதவியை ராஜினாமா செய்தனர்.

பிரதமர் அலுவலகம் மற்றும் அவரது வீட்டையும் கலவர கும்பல் விட்டு வைக்கவில்லை. அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். ‘சர்மா ஒலி திருடன், நாட்டை விட்டு வெளியேறு’ போன்ற கோஷங்களை எழும்பினர்.

நேபாளத்தில் 239 ஆண்டுகள் பழமையான மன்னர் ஆட்சியை, 2008ல் முடிவுக்கு கொண்டு வந்தனர். அதன் பின் தற்போது வரை நாட்டில் 14 வெவ்வேறு அரசுகள் அமைந்துள்ளன. அவற்றில் எந்தவொரு அரசும் முழுமையான ஐந்து ஆண்டு காலத்தை நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, நேபாளத்தில் அதிகரித்து வரும் கலவரம் குறித்து ஆஸ்திரேலிய ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
அத்துடன், அந்நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே நேபாளத்தில் உள்ள ஆஸ்திரேலியர்கள் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் அறிவுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular