Homeஉள்நாடுபொதுமன்னிப்பு விவகாரம்: சிறைச்சாலை ஆணையாளர் இடைநிறுத்தம்!

பொதுமன்னிப்பு விவகாரம்: சிறைச்சாலை ஆணையாளர் இடைநிறுத்தம்!

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மன்னிப்பு எனும் போர்வையில் கைதிகளை அனுமதியின்றி விடுவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (08) 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டது.

அதேவேளை நேற்று முன்தினம் (07) அவர் 05 மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

சில கைதிகளை சட்டவிரோதமாக விடுவிப்பதற்காக ஜனாதிபதி மன்னிப்பு, தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி ஜனாதிபதி செயலகம் அளித்த முறைப்பாட்டிற்கமைய இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், அந்த நபருக்கு மன்னிப்பு வழங்கப்படவில்லை என்பதை ஜனாதிபதி செயலகம் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

முறையான அங்கீகாரம் இன்றி கைதிகள் விடுவிக்கப்பட்டிருக்கக்கூடிய கடந்தகால சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular