“அமெரிக்காவை விமர்சித்துக்கொண்டிருப்பதைவிட, வரி விதிப்பால் ஏற்படும் தாக்கங்களிலிருந்து மீள்வதற்குரிய வழிமுறைகளை கண்டறியவேண்டும். எனவே, அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை ஜனாதிபதி உடன் கூட்ட வேண்டும்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டுக்கு சவால் ஏற்படும்போது அரசியல் பேதங்களுக்கு அப்பால் நாம் ஓரணியில் நிற்க வேண்டும். வரி விதிப்பால் அமெரிக்காவை திட்டி பயனில்லை. அந்நாட்டு மக்களின் நலன்கருதியே ட்ரம்பால் அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பல நாடுகள் ட்ரம்ப் நிர்வாகத்துடன் பேச்சு நடத்திவருகின்றன. சில நாடுகள் வரிகளை குறைத்துகொண்டுள்ளன. மேலும் சில நாடுகள் முன்கூட்டியே தயார் படுத்தலில் ஈடுபட்டுவந்தன. ஆனால் சம்பவம் நடந்த பிறகே எமது நாட்டில் குழு அமைக்கப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் ஜி.எஸ்.பி. பிளஸ் பிரச்சினை வந்தது. ஆனால் ஐரோப்பியாவை விமர்சிப்பதைவிடுத்து, அதற்கு மஹிந்த முகம்கொடுத்தார். ஐரோப்பிய சந்தை வேண்டாம் எனவும், நாங்கள் இல்லாவிட்டால் ஐரோப்பியர்களுக்கு உள்ளாடை இல்லை எனவும் விமர்சிக்க வில்லை. மாறாக பேச்சுவார்த்தை நடத்தினோம். மாற்று வழிகளை தேடினோம். ஐரோப்பாவுக்குள் நுழையக்கூடிய மாற்று வழிகளையும் கண்டறிந்தோம்.
தற்போதைய சூழ்நிலைகூட சவால்மிக்கது. அதனை எதிர்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் தயார் நிலையில் இருக்கவில்லை. எனவே, ஜனாதிபதி சர்வக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். மாற்று யோசனைகள் தொடர்பில் கருத்துகளை கேட்டறிய வேண்டும். அனைத்து கட்சிகளையும் இணைக்க வேண்டும். முன்பு இருந்த எதிர்க்கட்சிகளைபோல நாம் காலை வாரமாட்டோம். சவால்களில் இருந்து நாடு மீள்வதற்கு துணை நிற்போம்.” – என்றார்.
