2022 ஆம் ஆண்டு நாட்டை வங்குரோத்தாக்கிய பொருளாதார சுனாமியை ஒரு நாடாக எதிர்கொண்டோம். அதைவிடப் பாரதூரமான பொருளாதார சுனாமி தற்போது ஏற்படப் போகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2022 இல் உருவெடுத்த வரிசை யுகத்தினால் அமைதியின்மை, இடர்பாடுகள் போன்றவற்றால் மக்கள் பல இன்னல்களை அனுபவித்தனர். இம்முறை அதைவிடப் பாரதூரமான ஆபத்தான பொருளாதார நிலைமை உருவெடுத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவானது இலங்கையின் ஏற்றுமதிகள் மீது 44 சதவீத பரஸ்பர வரி விதித்துள்ளது. அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 88 சதவீத வரி எமது நாட்டில் விதித்தமையே இதற்கு காரணமாகும்.
இந்தப் பிரச்சினையால், அமெரிக்காவுக்காவுக்கான நமது நாட்டின் ஏற்றுமதியும், அந்த ஏற்றுமதியை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் கடும் சிக்கலை எதிர்கொள்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த வரி விதிப்பால் நமது நாட்டுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். நமது நாட்டின் 40 சதவீத ஆடைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின்றன. இது தடைபடலாம். இந்த வரி ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
இந்தப் பிரச்சினை ஏற்படுவதற்குப் பல மாதங்களுக்கு முன்னரே அரசாங்கத்திடம் இது குறித்து சுட்டிக்காட்டியிருந்தோம். இலங்கை அரசாங்கம் சர்வதேச வர்த்தகத் துறையைப் பற்றி நன்கு அறிந்த ஒரு குழுவை வொஷிங்டனுக்கு அனுப்பி உரிய தரப்புகளுடன் கலந்துரையாடலை முன்னெடுக்குமாறு நாம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தோம். ஆனால் அரசாங்கம் இதனை புறக்கணித்து, ஆணவம் காட்டி வருகிறது எனவும் சஜித் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த வரி விதிப்பால் ஆடைத் தொழில் ஏற்றுமதியில் 40 சதவீத அமெரிக்கச் சந்தை வாய்ப்பை இழக்க நேரிடும். இதனால், தொழிற்சாலைகளில் உற்பத்திகள் குறைவடையும்.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் பல தொழிலாளர்களுக்கு தமது தொழில்களும் இல்லாது போகலாம். அந்நியச் செலாவணி குறைந்து, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை கடுமையாகப் பாதிக்கும். இதனால் 2028 ஆம் ஆண்டு முதல் மீண்டும் கடனை செலுத்துவதில் சிக்கல் ஏற்படும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
