இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் கொழும்பில் இன்று நடைபெற்றது.
சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
அதேபோல், இலங்கை வங்குரோத்தடைந்திருந்த சந்தர்ப்பத்தில் ஒரு தனி நாடாக அதிக நிதி ஆதரவுகளை வழங்கி அதிக உதவிகளை செய்த நாடு இந்தியாவே என்றும், அத்தருணத்தில் நாட்டுக்கு உதவும் வகையில் இந்திய அரசு அளித்த ஒத்துழைப்பை பெரும் மனம் கொண்டு பாராட்டுகிறேன் என்றும், இதற்காக இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியப் பிரதமர் முன்னிலையில் தெரிவித்தார்.
மேலும், இந்தியா- இலங்கை நட்புறவை வலுவான அடித்தளமாகப் பேணுவதுடன், இரு நாடுகளின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் இலக்குகளை நிறைவு செய்து கொண்டு, இறையாண்மை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
அவ்வாறே, எமது நாடு வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார மந்தநிலையிலிருந்து மீளுவதற்கு மேலும் தேவையான ஒத்துழைப்புகளைப் பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
ஐக்கிய அமெரிக்கா குடியரசு எமது நாட்டின் ஏற்றுமதிக்கு விதித்துள்ள 44 சதவீத பரஸ்பர வரி காரணமாக இந்நாட்டின் ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கும், அதன் ஊழியர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் நிலைமைகளையும் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
ஆகையால், இந்திய சந்தையில் எமது நாட்டின் ஆடைகள் உட்பட பிற உற்பத்திப் பொருட்களுக்கு அதிக சந்தை வாய்ப்புகளைப் பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது இந்தியப் பிரதமரிடம் கௌரவத்துடன் கேட்டுக் கொண்டார்.
