கசகஸ்தானில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக மாறியதையடுத்து, நாட்டின் சில பகுதிகளில் இரண்டு வார கால அவசர நிலையை அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் பல பகுதிகளில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப் பெரிய நகரமான அல்மாட்டியில் எதிர்ப்பாளர்களினால் வாகனங்கள் தீவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்தனர்.
அமைதியின்மைக்கு மத்தியில் அரசாங்கத்தின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி Kassym-Jomart Tokayev புதன்கிழமை வெளியிட்ட ஆணையில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் துணைப் பிரதமரான அலிகான் ஸ்மைலோவை புதிய பிரதமராக இடைக்கால அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
செவ்வாயன்று ஒரு வீடியோ உரையில் ஜனாதிபதி, எதிர்ப்பாளர்களின் அரசாங்க அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள் முற்றிலும் சட்டவிரோதமானது என்று கூறினார்.