புதுக்கடை நீதிமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டு உயிரிழந்த கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதனடிப்படையில், இதுவரை இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் கம்பஹா மற்றும் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததற்காகவும், துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதற்கு முதல்நாள் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு துப்பாக்கியினை வழங்கியதற்காகவும் கம்பஹா, மல்வத்த வீதி, அஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தமிந்து லக்ஷான் என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் மற்றைய சந்தேக நபரையும் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று தப்பிச்செல்வதற்கு உதவியதற்காக, தமித் அஞ்சன நயனஜித் என்ற 25 வயதுடைய நபரும், உடுகம்பொல, அஸ்கிரியபொல பகுதியைச் சேர்ந்த 19 வயது சாமோத் கிம்ஹான் என்ற இளைஞரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
