மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பாதீடுமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மலையக மக்களின் ஊதியம் பற்றி பேசப்பட்டது. நாங்கள் அதற்கு அப்பால் செல்ல வேண்டும் என நம்புகிறோம். மலையக மக்களுக்கு நில உரிமை இல்லை, வீட்டு உரிமை இல்லை.
எனவே, விவசாயம், நிலங்களின் உரிமை, சொந்த வீட்டில் வாழும் உரிமை ஆகியவற்றை வழங்கி அவர்களை வலுப்படுத்த வேண்டும்.
சொந்த சிறு தேயிலைத் தோட்டத்துடன், நாட்டின் நிலங்களில் 40 சதவீதத்தை பயன்படுத்தி உற்பத்தியில் 60 சதவீத பங்களிப்பை வழங்கும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக அந்த சமூகத்தை மாற்ற வேண்டும்.
வேலையற்ற இளைஞர்களுக்கும் பயிரிடப்படாத நிலப்பகுதியில் ஒரு பகுதியை பகிர்ந்தளிப்பதன் மூலம் நிலையான தீர்வு வழங்கப்பட வேண்டும். ஊதிய உயர்வை விட இத்தகைய செயல்முறை தேசிய உற்பத்திக்கும் பங்களிப்பை செய்கிறது.” – என்றார்.
