உலக அளவில் நடைபெறும் டி20 லீக்கில் சிறப்பு வாய்ந்ததாக இந்தியன் பிரீமியர் லீக் (IPL) விளங்குகிறது.
இதில் ஏராளமான சர்வதேச வீரர்கள் விளையாடுகிறார்கள். கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் விளையாட்டாக இது உள்ளது.
ஐபிஎல் தொடரை வைத்து கோடிக்கணக்கான ரூபாய்க்கு சூதாட்டம் நடைபெறுகிறது. சூதாட்ட கும்பல் உடன் தொடர்புள்ள சில தொழில் அதிபர்கள் கிரிக்கெட் வீரர்களுடன் ரசிகர்கள் போன்று அறிமுகமாகி, அவர்களுக்கு பணம் அல்லது பரிசு வழங்கி நட்பு ஏற்படுத்திக் கொள்வார்கள். அதன்பின் போட்டி தொடர்பான சில தகவல்களை பெற்று சூதாட்டக்காரர்களுக்கு அதை வழங்கி விடுவார்கள்.
இதுபோன்ற நபர்களிடம் வீரர்கள், அணி உரிமையாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப் உள்ளிட்டோர் சிக்கிவிடக் கூடாது என்பதில் பிசிசிஐ கவனமாக உள்ளது.
இதற்காக ஊழல் தடுப்பு பாதுகாப்பு குழுவை (Anti-Corruption Security Unit (ACSU)) அமைத்துள்ளது. இந்த குழு சந்தேகத்திற்குரிய வகையில் யாராவது வீரர்களை அணுகுகின்றனரா? என ரகசியமாக கண்காணிப்பார்கள்.
இந்த நிலையில் சூதாட்ட கும்பலுடன் தொடர்புடைய ஐதராபாத்தை சேர்ந்த ஒரு தொழில் அதிபர், வீரர்களை அணுக முயற்சி செய்வதாக இந்த குழு எச்சரித்துள்ளது.
இதனால் வீரர்கள் மற்றும் அணியில் உள்ள அனைவரும் ரசிகர்கள் போர்வையில் தங்களை தனி நபர் யாராவது அணுகினால் உஷாராக இருங்கள். அது தொடர்பாக உடனடியாக தகவல் தெரிவிக்கவும். அவர்கள் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தினருக்கும் பரிசு போன்ற பொருட்கள் கொடுத்து வலை விரிப்பார்கள். இதனால் உஷாராக இருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.